மொரோக்கோவின் வெற்றி பயணம் தொடர்கிறது
உலக கிண்ண காற்பந்தாட்ட தொடரின் காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று மொரோக்கோ அணி முதற் தடவையாக அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. அவர்கள் காலிறுதிப்போட்டியில் விளையாடியதும் இதுவே முதற் தடவை.
ஆரம்பம் முதலே போட்டி விறு விறுப்பாக சென்றது. மொரோக்கோ அணி ஆதிக்கம் செலுத்தி பந்தினை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. நட்சத்திர வீரரும், போர்த்துக்கல் அணியின் தலைவருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ முதற் பாதியில் களமிறங்கவில்லை. இந்த முடிவு போர்த்துக்கல் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்ததியது. கடந்த போட்டி போன்று இலகுவாக வெற்றி பெறலாம் என்ற எண்ணத்தில் இந்த முடிவை போர்த்துக்கல் அணி எடுத்ததே அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
மொரோக்கோ அணி சார்பாக யூசெப் என் நெஸ்ரி 42 ஆவது நிமிடத்தில் கோல் அடித்து முன்னிலை பெற்றுக் கொடுத்தார். அதுவே வெற்றி கோலாகவும் அமைந்தது.
போர்த்துக்கல் அணி பல கோல் முயற்சிகளை மேற்கொண்ட போதும் அவை கைகூடாமல் போனது. ரொனால்டோவின் இறுதி உலக கிண்ணமாக இது கருதப்படும் நிலையில் 2006 ஆம் ஆண்டுக்கு பின்னர் உலககிண்ண காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று போர்த்துக்கல் அணி முதற் தடவை காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற மொரோக்கோ அணியுடன் தோல்வியடைந்து வெளியேறுவது ரொனால்டோவுக்கு ஏமாற்றம் தரும் விடயமாகவே அமைந்துள்ளது.
மொரோக்கோ அணி 70 ஆம் ஆண்டு முதற் தடவையாக உலக கிண்ணத்துக்கு தகுதி பெற்றது. 86, 94 , 98 ஆம் ஆண்டுகளில் ஆபிரிக்கா வலயத்திலிருந்து தகுதி பெற்ற மொரோக்கோ கடந்த வருடமம் முதல் சுற்றோடு வெளியேறியது. முதல் சுற்றினை இம்முறை தாண்டியவர்கள், அரை இறுதி வரை தகுதி பெற்றுள்ளனர்.
இவர்கள் முதல் சுற்றில் பலமான பெல்ஜியம் அணியையும், கனடா அணியையும் வெற்றி பெற்றார்கள். குரேஷியா அணியுடன் சமநிலை முடிவை பெற்றனர். இரண்டாம் சுற்றில் மற்றுமொரு பலமான அணியான ஸ்பெய்ன் அணியினை வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.